இக்னோ பல்கலை. எம்பிஏ படிப்புக்கு மார்ச் 4-ல் நுழைவுத்தேர்வு: ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இக்னோ பல்கலைக்கழக எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம்வழங்கும் எம்பிஏ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம்.
பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (எஸ்சி, எஸ்டி. ஓபிசி) எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். வயது வரம்பு கிடையாது. பணி அனுபவம் தேவையில்லை. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.2018-ம் ஆண்டு பருவத்துக்குரிய எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கு வரும் மார்ச் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000.
ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மற்ற படிப்புகளுக்கு வி்ண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதி. கூடுதல் விவரங்கள் அறிய வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக